மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
24. அடைக்கலப்பத்து
திருப்பெருந்துறையில் அருளியது
பக்குவ நிண்ணயம்
கலவைப் பாட்டு
செழுக்கமலத் திரளனநின்
    சேவடிசேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியருடன்
    போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப்
    பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன்
    உடையாய்உன் அடைக்கலமே.
1
வெறுப்பனவே செய்யும்என்
    சிறுமையைநின் பெருமையினால்
பொறுப்பவனே அராப்பூண்
    பவனேபொங்கு கங்கைசடைச்
செறுப்பவ னேநின்
    திருவரு ளால்என் பிறவியைவேர்
அறுப்பவனே உடையாய்
    அடியேன்உன் அடைக்கலமே.
2
பெரும்பெருமான் என்பிறவியை
    வேரறுத்துப் பெரும்பிச்சுத்
தரும்பெருமான் சதுரப்பெரு
    மான்என் மனத்தினுள்ளே
வரும்பெருமான் மலரோன்நெடு
    மாலறி யாமல்நின்ற
அரும்பெருமான் உடையாய்
    அடியேன்உன் அடைக்கலமே.
3
பொழிகின்ற துன்பப் புயல்வெள்
    ளத்தில்நின் கழற்புணைகொண்டு
இழிகின்ற அன்பர்கள் ஏறினர்
    வான்யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக்
    காமச் சுறவெறிய
அழிகின்றனன் உடையாய்
    அடியேன்உன் அடைக்கலமே.
4
சுருள்புரி கூழையர் சூழலிற்
    பட்டுன் திறம்மறந்திங்கு
இருள்புரி யாக்கையி லேகிடந்
    தெய்த்தனன் மைத்தடங்கண்
வெருள்புரி மான்அன்ன நோக்கிதன்
    பங்கவிண் ணோர்பெருமான்
அருள்புரியாய் உடையாய்
    அடியேன்உன் அடைக்கலமே.
5
மாழைமைப் பாவிய கண்ணியர்
    வன்மத் திடவுடைந்து
தாழியைப் பாவு தயிர்போல்
    தளர்ந்தேன் தடமலர்த்தாள்
வாழியெப் போதுவந் தெந்நாள்
    வணங்குவன் வல்வினையேன்
ஆழியப் பாவுடை யாய்அடி
    யேன்உன் அடைக்கலமே.
6
மின்கணினார் நுடங்கும் இடையார்
    வெகுளிவலையில் அகப்பட்டுப்
புன்கணனாய்ப் புரள்வேனைப்
    புரளாமற் புகுந்தருளி
என்கணிலே அமுதூறித்
    தித்தித்தென் பிழைக்கிரங்கும்
அங்கணனே உடையாய்
    அடியேன்உன் அடைக்கலமே.
7
மாவடு வகிரன்ன கண்ணி
    பங்காநின் மலரடிக்கே
கூவிடுவாய் கும்பிக்கே
    யிடுவாய்நின் குறிப்பறியேன்
பாவிடை யாடுகுழல்
    போற்கரந்து பரந்ததுள்ளம்
ஆகெடுவேன் உடையாய்
    அடியேன்உன் அடைக்கலமே.
8
பிறிவறியா அன்பர்நின்
    அருட்பெய்கழல் தாளிணைக்கீழ்
மறிவறியாச் செல்வம்வந்து பெற்றார்
    உன்னை வந்திப்பதோர்
நெறியறியேன் நின்னையே அறியேன்
    நின்னையே அறியும்
அறிவறியேன் உடையாய்
    அடியேன்உன் அடைக்கலமே.
9
வழங்குகின் றாய்க்குன் அருளார்
    அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன்
    வினையேன்என் விதியின்மையால்
தழங்கருந் தேனன்ன தண்ணீர்
    பருகத்தந் துய்யக்கொள்ளாய்
அழுங்கு கின்றேன் உடையாய்
    அடியேன்உன் அடைக்கலமே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com